Search This Blog

Friday, January 14, 2011

Abirami Andhathi Lyrics (Tamil)

காப்பு(கட்டளை கலித்துறை)
தாரமர்கொண்ர்ரையும் சண்பக மாலையும் சாத்தும்தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே உலகு ஏழும்பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் ஏன் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே.

நூல்

நல்வித்தையும் ஞானமும் பெற

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன்விழுத்துனையே. 1

பிரிந்தவர் ஒன்று சேர

துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பனையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச்சிலையுமேன் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே. 2

சம்சார பந்தம் நீங்க

அறிந்தேன் ஏவரும் அறியா மறையை அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவிப்
பிரிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்.
மறிந்தே விழுநரகுக்குற வாய மனிதரையே. 3

உயர் பதவிகள் பெற்றிட

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்துசென்னி
குனிதரும் சேவடிக்கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் ஏன் புந்தி எந்நாளும் பொருந்துகவே. 4

மனக்கவலை மறைந்திட

பொருந்திய முப்புரை செப்புரைசெய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சிமருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே. 5

மந்திரசித்தி பெற்றிட

சென்னியது உன் பொற்றிருவடித் தாமரை சிந்தையுள்ளே
மன்னியதுன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே
பன்னியதென்றும் உன்றன் பரமாகம பத்ததியே. 6

துன்பம் நீங்கிட

துதியுறும் மத்திற் சுழலும் என் ஆவி தளர்விலே தார்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே. 7

நல்லறம் சிறக்க

சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரை எல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
சுந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே. 8

இறையருள் பெற்றிட

கருத்தன எந்தை தன் கண்ணன் வண்ணக் கனக வெற்பிற்
பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்
திருத்தனபாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்தேன் முன்னிற்கவே. 9

முக்திப்பேறு பெற்றிட

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் எழுதாமாரையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்
தன்றும் பிறந்தவளே அழியாமுத்தி ஆனந்தமே. 10

இல்வாழ்கை இன்பம் நிலைத்திட

ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணார விந்தம் தவளநிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் மூடிக் கண்ணியதே. 11

தியானத்தில் மனம் ஒருமைப்பட

கண்ணியது உன்புகழ் கற்பதுன் நாமம் கசிந்துபத்தி
பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் ஏதுவன் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.12

மனோதிடம் பெற்றிட

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே. 13

முதன்மை ஏதிலும் பெற

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல்திசை முகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே. 14

அழியாசெல்வமும் பேரின்பமும் பெற

தண்ணளிக்கொன்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர்தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியாமுக்தி வீடுமன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே. 15

சிறந்த ஆற்றல் பெற

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்தது கிளர்ந்தொளிரும்
ஒளியே ஒளிரும் ஒலிகிடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளிமுதல் பூதங்கள் ஆகி விரித்த அம்மே
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே. 16

கன்னிகைகளுக்கு நல்ல வரன் கிட்ட

அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதிசயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்
மதிசயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே. 17

பயம் அகல

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என் மேல்வரும்போது வெளிநிற்கவே. 18

பேரின்பம் உண்டாக

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே. 19

வீடு, மனை முதலியன கிட்ட

உறைகின்ற நின் திருகோயில் நின்கேள்வர் ஒருபக்கமோ
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ என்றன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே. 20

இறைவன் பூஜை செய்யாத பாவம் நீங்க

மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலா மயில் தாவுகங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடை ஆளுடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே. 21

பிறவா வரம் பெற

கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்குவம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே பனிமால் இமயப்
படியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கினிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே. 22

மனச்சஞ்சலம் நீங்க

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டந்தன்னை
உள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளதே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே. 23

நோய்கள் நீங்க

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அனுகதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே. 24

நினைத்தவை யாவும் தடைகளின்றி ஈடேற

பின்னே திரிந்துன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே. 25

வாக்கில் வன்மையும் செல்வாக்கும் பெற்றிட

ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும்படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கென்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே. 26

அம்பிகை அருள்பெற்றிட

உடைத்தனை வஞ்சப் பிறவி உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே. 27

சகல சுகங்களும் பெற

சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியாத அரசும்
சொல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே. 28

சகலகாரிய சித்தி பெற

சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும் சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முக்தியும் முக்திக்கு வித்தும் வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே. 29

தொடர் துன்பங்கள் நீங்க

அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய் கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கினி நான் ஏன் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே
ஒன்றே பலவுருவே அருவே என் உமையவளே. 30

மறுமையில் இன்பம் உண்டாக

உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு
எமையும் தமக்கன்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்குச்
சமயங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே. 31

அம்பிகை ஆசி பெற்றிட

ஆசைக் கடலில் அகப்பட்டருள் அற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின்பாதம் எனும்
வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே. 32

அன்னையின் நினைவு அகலதிருக்க

இழைக்கும் வினைவழியே அடும்காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அந்தர் சித்தர் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் போழுதுன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே. 33

இறையார்க்கு உதவிட

வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவோடு தான் போய் இருக்கும் சதுர்முகம்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே. 34

கடிமணம் நிகழ

திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட்கொரு தவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ தரங்கக் கடலுள்
வெங்கட் பணி ஆணை மேல் துயில் கூறும் விழுப்பொருளே. 35

முன் வினைகள் போக

பொருளே பொருள்முடிக்கும் போகமே அரும்போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளிவெளி ஆகி இருக்கும் உன்றன்
அருள்ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே. 36

பொன்,பொருள் பெற

கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்து மாலை விட அரவின்
பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே. 37

வேண்டியதைப் பெற

பவளக் கொடியிற் பழுத்த செவ்வாயும் பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணைமுலையாள்
அவளை பணிமின் கண்டீர் ஆளுகைக்கே. 38

அனைத்திலும் தேர்ச்சி பெற

ஆளுகைக்கு உன்றன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால்
மீளுகைக்கு உன்றன் விழியன் கடை உண்டு மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை நின்குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்தவில்லான் பங்கில் வாழ்நுதலே. 39

பூர்வ புண்ணியப் பலன் பெற

வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சிற்
காணுதற்குண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன் செய் புண்ணியமே. 40

இறை அடியார் நட்புகிட்ட

புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி எங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே. 41

இவ்வுலகம் நமக்கு உதவிட

இடங்கொண்டு விம்மி இணைகொண்டிறுகி இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலைகொண்டிறைவர் வலியநெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப் பரிபுரையே. 42

தீமையெல்லாம் நீங்க

பரிபுரச் சீறடி பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துரமேணியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே. 43

மனநலம் சீராக

தவளே இவள் எங்கள் சங்கரனார்மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே. 44

வீண் பழிகள் நீங்கிட

தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசடியேன்
கண்டுசெய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ
மீண்டு செய்தாலும் பொறுக்கைநன்றே பின் வெறுக்கை அன்றே. 45

தீய பழக்கங்கள் விலகிட

வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகமை புதியதன்றே புது நஞ்சை உண்டு
கருக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே.46

யோகசித்தி பெற

வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று விள்ளும்படி அன்று வேலைநிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்தது சுடர்கின்றதே.47

உடல்பற்று நீங்க

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப் போதிருப்பார் பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் நோயும் குரம்பையிலே.48

யம பயம் நீங்க

குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கிட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே.49

அம்பிகையின் தரிசனம் பெற

நாயகி நான்முகி நாராயணிகை நளினபஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே. 50

வாழ்வில் சிறக்க

அரணம் பொருள் என்றருள் ஒன்றிலாத அசுரர் தங்கள்
முரண் அன்றழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே. 51

செல்வம் உண்டாக

வையகம் துரகம் மதகிரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்புமுன்பு
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே. 52

தவம் கைகூடிட

சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம் பெரிய முளையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங் கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துக்
தன்னந் தனியிருப்பார்க்கு இதுபோலும் தவம் இல்லையே.53

கடன்கள் பைசலாக

இல்லாமை சொல்லி ஒருவர்தம்பாற் சென்றிழிவு பட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
சொல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. 54

விருப்பு வெறுப்பற்ற மோனநிலை எய்த

மின்னாயிரம் ஒரு மேய்வடிவாகி விளங்குகின்ற
அன்னாள் அகமகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு
முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னை
உன்னா தொழியினும் உன்னிலும் வேண்டுவது ஒன்றில்லையே. 55

எல்லார் அன்பினையும் பெற

ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கிநிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே. 56

வறுமை நீங்கிட

ஐயன் அளந்த படி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்
உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய் இதுவோ உன்றன் மெய்யருளே.57

இறையுணர்வும் மன அமைதியும் பெற

அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்  புயம்முலைத் தையல்நல்லாள் தகைசேர் நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்
சரணாம் புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே.58

வாரிசுகள் சிறந்து விளங்க

தஞ்சம் பிறிதில்லை ஈதல்லது என்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயல நினைக்கின்றிலேன் ஒற்றை நீள் சிலையும்
அஞ்சம்பும் இக்கு அலராக நின்றாய் அறியார் எனினும்
பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே. 59

மெய்யுணர்வு பெற

பாலினும் சொல் இனியாய் பணிமாமலர்ப் பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு
நாலினும் சாலநன்றோ அடியோன் முடை நாய்த் தலையே.60

உண்மை உணர்வு உண்டாக

நாயேனையும் இங்கொருபொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத் தங்கைச்சியே. 61

பயங்கள் விலக

தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கண் கரிஉரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடைக்
கொங்கைக் குறும்பைப் குறியிட்ட நாயகி கோகனகச்
செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே. 62

நல்லறிவு உண்டாக

தேறும் படி சில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக்
கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும்சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே. 63

இறை பக்தி பெருக

வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு
பூணேன் உனக்கன்பு பூண்டுகொண்டேன் நின் புகழ்ச்சியன்றிப்
பேணேன் ஒரு பொழுதும் திருமேனி ப்ரகாசமன்றிக்
காணேன் இருநிலமும் திசை நான்கும் ககனமுமே. 64

மழலை செல்வம் பெற

ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனம் முன்செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்
முகனும் முந்நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோவல்லி நீசெய்த வல்லபமே. 65

இசைபாடும் ஆற்றல் பெற

வல்லபம் ஒன்றறியேன் சிறியேன்நின் மலரடிச் செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் விற்றிருப்பாய் வினையேன்தொடுத்த
சொல் அவமாயினும் நின்திரு நாமங்கள் தோத்திரமே. 66

பயம் நீங்க

தோத்திரம் செய்து தொழுதுமின்போலும் நின் தோற்றம்ஒரு
மாத்திரை போதும் மனத்தில்லை யாதுஅவர் வண்மைகுலம்
கோத்திரம் கல்வி குணம்குன்றி நாளும் குடில்கள்தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்குழலாநிற்பர் பார்எங்குமே.67

செல்வங்கள் பெருக

பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும்
ஊரும் முருகு சுவைஒளி ஊரொளி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே.68

சகல செளபாக்கியங்களும் பெருகிட

தனம்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.69

கலைகளில் தேர்ச்சி பெற

கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம் பாடடவியல்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாடிதன் பேரழகே.70

மனக்குறை நீங்க

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள் பணி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொரும்பிருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என்குறையே.71

பிறவி பிணிதீர

என்குறை தீர நின்றேத்துகின்றேன் இனி யான் பிரிக்கின்
நின்குரையே அன்றி யார் குறை கான் இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்
தன்குறை தீர எங்கோன்சடைமேல் வைத்த தாமரையே. 72

கர்ப்பம் தரித்திட

தாமம் கடம்பு படைபஞ்ச பானம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுதேமகென்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கோளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடிரண்டு நயனங்களே.73

செய்தொழில் மேன்மை பெற

நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையைப்
பயனென்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும்பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே. 74   

விதியை வெல்ல

தங்குவர்  கற்பகத் தாருவின் நிழலில் தாயர்இன்றி
மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும்
பொங்குவர் அழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கியவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.75

தனக்குரிய பொருளை பெற்றிட

குறித்தேன் மனதில்நின் கோலம்எல்லாம்நின் குறிப்பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டுகிண்டி
வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப் பிரான்ஒரு கூற்றைமெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்ச பான பயிரவியே.76

பகை அச்சம் நீங்க

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயர்ஆவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வாராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புரவே.77

செளபாக்கியங்கள் உண்டாக

செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராமவல்லி அணிதரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியன் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணைவிழிக்கே.78

நல்லோர் நட்பு கிட்ட

விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழிகிடக்கப்
பழிக்கே சுழன்று வெம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே. 79

மனமகிழ்ச்சி நிலைக்க

கூட்டிவா என்னைத் தன் அடியாரில் கொடியவினை
ஓட்டியவா என்கண் ஓடிய வாதன்னை உள்ளவண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிகின்றவா
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே.80

நன்னடத்தை உண்டாக

அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு
இனங்கேன்எனதுன தென்றிருப்பார் சிலர் யாவரோடும்
இனங்கேன் அறிவொன்றிலேன் என் கண் நீவைத்த பேரொளியே.81

மனம் ஒருமைப்பட

அளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும்
களியாகி அந்த கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு
வெளியாய்விடின் எங்ங்னேமறப்பேன்நின் விரகினையே.82

பலர்க்குத் தலைமை ஏற்க

விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும்
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே. 83

இக்கட்டுகள் நீங்க

உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ஒளிர்மதிச்செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத் தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மானிடையாளை இங்கென்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே. 84

அல்லல் எல்லாம் அகல

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வாண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் ஏன் அல்லல்எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க்குங் குமமுலையும் முலைமேல் முத்து மாலையுமே. 85

அச்சம் விலக

மால்அயன் தேட மறைதேட வானவர் தேடநின்ற
காலையும் சூடகக் கையும் கொண்டு கதித்தகப்பு
வேலைவெங் காலன்என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே. 86

செயற்கரிய செய்து புகழ்பெற

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்றன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால்மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம்எல்லாம்
பழிக்கும்படி ஒரு பாகம்கொண்டாளும் பராபரையே. 87

அம்பிகையின் அருள் கிடைக்க

பரம் என்றுனை அடைந்தேன்தமியேனும் உன் பத்தருக்குள்
தரம்அன்றிவன்என்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரம்அன்று எறியப் பொருப்புவில் வாங்கியபோதில்அயன்
சிரம்ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே. 88

யோகசித்தி பெற

சிறக்கும் கமலத் திருவேநின் சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும்நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தரவந்து உடம்போடுயிர் உறவற்றரிவு
மறக்கும் பொழுது என்முன்னேவரல் வேண்டும் வருந்தியுமே. 89

தம்பதிகள் ஒற்றுமையுடன் இருக்க

வருந்தாவகை என் மனத்தாமரையினில் வந்துபுகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தா தொருபொருள் இல்லை விண்மேவும் புலவர்க்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.90

அரசாங்க அனுகுலம் பெற

மெல்லிய நுண்ணிடை மின்னனையாளை விரிசடையோன்
புல்லிய மென்முலை பொன்னனையாளைப் புகழ்ந்து மறை
சொல்லிய வண்ணம் தொழும்அடியாரைத் தொழும் அவர்க்குப்
பல்லியம் ஆர்த்தொழ வெண்பகடு ஊரும் பதம் தருமே.91

மனப்பக்குவம் உண்டாக

பதத்தே உருகிநின் பாதத்திலே மனம் பற்றி உன்றன்
இத்ததே ஒழுக அடிமைகொண்டாய் இனி யான்ஒருவர்
மதத்தே மதிமயங் கேன் அவர் போனவழியும் சொல்லேன்
முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே.92

உள்ளத்தில் நிறைவு உண்டாக

நகையே இக்திந்த ஞாலம்எல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ்முளை மானே முதுகண் முடிவில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பதும்நாம்
மிகையே இவள்தன் தகைமையே நாடி விரும்புவதே. 93

மனதார வழிபட்டுப் பலன் பெற

விரும்பித் தொழும் அடியார்விழிநீர்மல்கி மெய்புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தமாகி அறிவிழந்து
சுரும்பிர் களித்து மொழிதடுமாறி முன்சொன்ன வெல்லாம்
தரும்பித்தர் ஆவரென்றால் அபிராமி சமயம்நன்றே. 94

தூய மனநிலை பெற

நன்றே வருகினும் தீதே விளைகினும் நான்அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்குள்ளவெல்லாம்
அன்றே உனதென்று அளித்துவிட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே. 95

பதவியும் புகழும் பெற

கோமள வல்லியை அல்லியந்தாமரைக் கோயில்வைகும்
யாமள வல்லியை ஏதமிலாளை எழுதரிய
சாமள மேனிச் சகல கலாமயில் தன்னைத் தம்மால்
ஆமளவும் தொழுவார் எழுபாருக்கும் அதிபரே. 96

தர்மங்கள் செய்து பலன்பெற

ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர்தங்கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன்முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தைலையே. 97

பிறர் வஞ்சனையால் பதிக்கபடதிருக்க

தைவந்து நின்அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கைவந்த தீயும் தலைவந்த ஆறும் கரந்ததெங்கே
மேய்வந்த நெஞ்சின்அல்லால் ஒருகாலும் விரகர்தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புகஅறியா மடப் பூங்குயலே. 98


மனதில் அருள்தன்மை வளர

குயிலாய் இருக்கும் கடம்ப அடவியிடைக் கோல இயல்
மயிலாய் இருக்கும் இமய சலத்திடை வந்துதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கைலாயருக்கு அன்றுஇமவான் அளித்த கனங்குழையே. 99

அம்பிகையை மனதில் தரிசிக்க

குழையைத் தழுவிய கொன்றையந்தார்கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநேடுந்தோளும் கருப்புவில்லும்
விழியைப் பொருதிறல் வேரியம் பானமும் வேண்ணகையும்
உழையைப்  பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிகின்றவே. 100

நூற் பயன்

ஆத்தாளை எங்கள் அபிராம வள்ளியை அண்டம்எல்லாம்
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளைப் புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.

No comments:

Post a Comment